ஜகாத் கொடுக்காதவர்களின் மறுமை நிலைமை


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
” பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய
கடமையை ( ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக
நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவரு டைய
விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை
குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக)
மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு
நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே
இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய
செர்க்கத்தின் பாதையை , அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார் ” என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன ? ( அவற்றுக்குரிய
கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை ?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு
“ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்)
நிறை வேற்றாவிட்டால் – தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு
வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு
விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி
மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால்
குளம்புகளால் மிதிக்கும் ; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம்
மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர் மீது
ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்) த (ஒரு
நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே
இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய
செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார் ” என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன ? ( அவற்றுக்குரிய
கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை ?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு
“ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்)
நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில்
தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள்
கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித்
தள்ளும் ; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை
மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது
ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு
நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே
இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய
சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார் ” என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன) ?” என்று கேட்கப்
பட்டது. அதற்கு “குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச்
சுமையாகும் ; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு
அளிக்கக்கூடியதாகும் ; இன்னொரு மனிதருக்கு ( இறைவனிடமிருந்து) நற்பலனைப்
பெற்றுத்தருவதாகும்: குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில்,
பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை
பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது
அவனுக்குப் பாவச் சுமையாகும். குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு
அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில்
பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின்
(பராமரிப்பின்) விஷயத்திலும், ( அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே)
அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை
( நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை
பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும். குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக
மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல்
வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு “அந்தப்
பசும்புல் வெளியில் ‘ அல்லது “அந்தத் தோட்டத்தில் ‘ அது மேயுமோ அந்த
அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர்
ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட
கயிற்றினைத் துண்டித்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு
மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகள், கெட்டிச் சாணங்கள்
அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன்
உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து
செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர்
புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின்
அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை ” என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது “அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன ?” என்று
கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும்
எனக்கு அருளப்பெறவில்லை ; ” எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர்
அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்
தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார் ‘ எனும் தனித்துவம்
வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த ( 99 :7,8) வசனங்களைத் தவிர ” என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 1803
நன்றி  ..kaathir .wordpress .com 
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக 
keywords ..ஜகாத் கொடுக்காதவர்களின் மறுமை  நிலைமை 

Comments