இறைவன் மனிதனைப் படைத்து, அவனுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை
அமைத்துக் கொடுத்து இவ்வுலகில் வாழ வைத்தான். மனிதன் தன்னை மட்டுமே
வணங்க வேண்டும், தனக்கு நிகராக எதையும் ஆக்கிவிடக் கூடாது, தனது
அருட்கொடைகளுக்கு மனிதன் நன்றி செலுத்தி வாழ வேண்டும் என்பதற்காக
இறைத்தூதர்கள் மூலம் வாழ்க்கைத் திட்டங்களை அறிவிக்கச் செய்தான்.
எல்லா இறைத் தூதர்களும் மனித இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
புனிதர்கள்தாம். எல்லாச் சமுதாய மக்களுக்கும் இறைத் தூதர்கள்
அனுப்பப்பட்டனர். இறைத் தூதர்கள் நல்லோருக்கு சுபச் செய்தி
கூறுபவர்களாகவும், தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும்
இருந்தார்கள். ஓர் இறைத் தூதரின் மறைவுக்குப் பின் அத்தூதர் காலத்து
மக்கள் இறைவனை மறந்து, இறைக் கட்டளைக்கு மாறு செய்து,
அநியாயம்-அட்டூழியங்களில் ஈடுபட்டு தான்தோன்றித்தனமாக வாழ்ந்த
காலங்களில், இறைவன் தனது மற்றொரு தூதரை அனுப்பி, அம்மக்களை
நேர்வழியின் பக்கம் அழைத்தான்.
இவ்வாறாகப் பலரும் இறைத் தூதர்களாக அனுப்பப்பட்டனர். நூஹு (அலை),
இப்ராஹீம் (அலை), தாவூது (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) போன்ற
இறைத் தூதர்களின் வரிசையில் இறுதித் தூதுவராக வந்தவர்தான் நபிகள் நாயகம்
முஹம்மது (ஸல்) அவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது 40வது வயதில் இறைத் தூதராகத் தேர்வு
செய்யப்பட்டார். இறைத் தூதராகத் தேர்வு செய்யப்படும் முன்னரே, அஸ்
ஸாதிக் (உண்மையாளர்), அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என மக்கள்
போற்றும்படி வாழ்ந்து காட்டினார். ஒழுக்கம், நேர்மை, நாணயம் என
வாழ்க்கையில் தானும் ஒரு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டி, அதன்படி
வாழ்ந்து, மனித சமுதாயமும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார்.
அண்ணலாரின் அழைப்பை ஏற்று, ஆரம்பத்தில் இறை மார்க்கத்தை ஏற்றவர்கள்,
ஏழை-எளிய மக்களே. இக்கால கட்டத்தில் இறை நிராகரிப்பாளர்கள், இறை
விசுவாசிகளை, “ஊர் விலக்கு’ செய்து, மூன்றாண்டுகள் அபுதாலிப்
கணவாயில் தங்க வைத்தார்கள். இச்சூழ்நிலையில், இறை விசுவாசிகள்
இலைகளையும், தழைகளையும் உண்ணும் அளவுக்கு ஏழ்மை அவர்களை வாட்டியது.
இதனால் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ந்து அடுப்பெரியும் நிலை இல்லாத
அளவுக்கு ஏழ்மை கடுமையாக இருந்தது. பசியின் காரணமாக அண்ணலார் தன் அடி
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு பணியாற்றியதுண்டு. ஆனால் மக்களின்
அறியாமையைப் பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவிக்க ஒரு போதும் எண்ணியதில்லை.
“ஒரு மனிதன் யாசிப்பதைவிட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச்
சென்று விறகு வெட்டி, அதை விற்று வாழ்க்கை நடத்துவது சிறந்தது’ என
உழைப்பின் உயர்வை உணர்த்திக் காட்டி யாசிப்பதை வெறுத்தார் அவர்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் கடன் வாங்கியிருந்தார். அம்மனிதர்
கடனைத் திருப்பிக் கேட்கையில் நபியிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார்.
அப்போது அருகிலிருந்த நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். உடனே நபி
(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “”அவரை விட்டுவிடுங்கள். கடன்
கொடுத்தவருக்குப் பேசும் உரிமை உண்டு” எனக் கூறி, அக்கடனை அழகிய
முறையில் திருப்பிச் செலுத்திவிட்டு, “”வாங்கிய கடனை அழகிய முறையில்
திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்’ என நவின்றார் நபிகள்
நாயகம்.
எந்த இறைத் தூதரும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை என நபி(ஸல்) அவர்கள்
கூற, அவர்களின் தோழர்கள், “இறைத் தூதர் அவர்களே! தாங்களுமா?’ எனக்
கேட்க அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஆம். மக்காவாசியிடம் சில கீராத்
கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக இருந்தேன்’ எனக் கூறியதன் மூலம் தன்னுடைய
வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி உரைக்கின்றார் அண்ணலார்.
தாயிப் நகர மக்களை இறைமார்க்கத்தின் பக்கம் அழைத்தபோது அம்மக்கள்
அண்ணலாரை கல்லால் எறிந்து காயப்படுத்திய வேளையிலும், “”இம்மக்கள்
அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நேர் வழி பெறாவிட்டாலும்
இவர்களின் சந்ததிகள் நேர்வழி பெறக் கூடும்’ என எண்ணி அம்மக்களுக்காக
இறைவனிடம் இறைஞ்சினார் அண்ணலார்.
க்கா வெற்றியின்போது, இன்னல் செய்த, இழிவுபடுத்திய அனைத்து
மக்களுக்கும் பொது மன்னிப்பு அளித்தார் நபிகள்.
ஒரு முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம்
பழங்களில் ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில்
வைத்துவிட்டார். உடனே தன் பேரரை நோக்கி, “”சீ! சீ! அதைத்
துப்பிவிடு” என்று கூறிவிட்டு, “”தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது
என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டு பொதுச் சொத்தை தம் குடும்பத்தினர்
சாப்பிடுவதைத் தடை செய்தார் அண்ணலார் அவர்கள்.
கேட்கும் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அண்ணலார் விளங்கினார். ஒரு
முறை அழகுற நெய்யப்பட்ட சால்வை ஒன்றை ஒரு பெண்மணி அண்ணலாருக்கு
அன்பளிப்பாக வழங்கினார். அந்தச் சால்வையை அண்ணலார் அவர்கள் வேட்டியாக
அணிந்திருந்தார். அதனைக் கண்ட நபித்தோழர் ஒருவர் அதைத் தனக்கு
வழங்குமாறு கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று அதைச்
சுருட்டி எடுத்து, கேட்டவரிடம் கொடுத்து அனுப்பினார். ஒரு முறை
நபி அவர்களிடம் ஒரு மனிதர் வீட்டிற்குள் வர அனுமதி கேட்டார். “இவர்
அக்கூட்டத்தாரில் மிகவும் கெட்டவர்’ எனக் கூறிய நபிகள், அவர் உள்ளே வர
அனுமதி கொடுத்தார். அவர் வீட்டினுள் வந்து உட்கார்ந்தபோது, அவரிடம்
நபியவர்கள் முக மலர்ச்சியுடனும், கனிவுடனும் நடந்து கொண்டார். அந்த
மனிதர் புறப்பட்டுச் சென்றபின் நபி அவர்களிடம் துணைவியார் ஆயிஷா
அவர்கள், “”இறைத் தூதர் அவர்களே! இந்த மனிதர் இப்படிப்பட்டவர் எனத்
தெரிந்தும் அவரிடம் முக மலர்ச்சியுடனும், கனிவுடனும் நடந்து
கொண்டீர்களே’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள்,
“”ஆயிஷாவே! நான் யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதை எப்போதேனும் நீ
கண்டதுண்டா?” என்று மொழிந்தார்.
மாற்றுச் சமுதாயத்தவர்கள்கூட தங்களின் பொருட்களை அண்ணலாரிடம்
அடைக்கலமாகக் கொடுத்திருந்தனர். மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது
அடைக்கலப் பொருட்களை திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பை தனது மருமகன் அலி
(ரலி) அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றார் நபிகள்.
நபி அவர்கள் பொய் சொல்வதை மிகவும் கடுமையாக வெறுத்தார். அவரின் கொடிய
விரோதி அபு ஜஹ்ல் கூட, “”நான் உம்மைப் “பொய்யர்’ என்று கூறமாட்டேன்.
நீர் கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் மிகவும் வெறுக்கிறேன்” என்றான்.
நபி(ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனஸ் பின்
மாலிக் என்பவர், “அண்ணலார் என்னை ஒரு போதும் திட்டியதோ, கடிந்து
பேசியதோ கிடையாது’ எனச் சான்று பகர்கிறார்.
இறைவனும் தனது திருமறையின் 68வது அத்தியாயத்தின் நான்காம் வசனத்தில்,
“”நபியே! நிச்சயமாக நீர் உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக
இருக்கின்றீர்” என்று புகழ்ந்து கூறுகின்றான்.
“”இறைவன் மீதும், இறுதி நாளின் மீதும், ஆதரவு வைத்து இறைவனை அதிகம்
தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி
உங்களுக்கு இருக்கிறது.” (திருக்குர்ஆன் 33:21)
இறைத்தூதரின் வழி நடந்து இம்மை, மறுமை வெற்றிகளைப் பெறுவோமாக! -
நன்றி:-ஒய்.கே.எம். அப்துல் காதிர்
நன்றி:-தினமணி
அண்ணல் நபி [ஸல்] ஓர் அழகிய முன்மாதரி !
No comments:
Post a Comment