கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Thursday 8 January 2015

அண்ணல் நபி [ஸல்] ஓர் அழகிய முன்மாதரி !


இறைவன் மனிதனைப் படைத்து,​​ அவனுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை
அமைத்துக் கொடுத்து இவ்வுலகில் வாழ வைத்தான்.​ மனிதன் தன்னை மட்டுமே
வணங்க வேண்டும்,​​ தனக்கு நிகராக எதையும் ஆக்கிவிடக் கூடாது,​​ தனது
அருட்கொடைகளுக்கு மனிதன் நன்றி செலுத்தி வாழ வேண்டும் என்பதற்காக
இறைத்தூதர்கள் மூலம் வாழ்க்கைத் திட்டங்களை அறிவிக்கச் செய்தான்.
எல்லா இறைத் தூதர்களும் மனித இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
புனிதர்கள்தாம்.​ எல்லாச் சமுதாய மக்களுக்கும் இறைத் தூதர்கள்
அனுப்பப்பட்டனர்.​ இறைத் தூதர்கள் நல்லோருக்கு சுபச் செய்தி
கூறுபவர்களாகவும்,​​ தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும்
இருந்தார்கள்.​ ஓர் இறைத் தூதரின் மறைவுக்குப் பின் அத்தூதர் காலத்து
மக்கள் இறைவனை மறந்து,​​ இறைக் கட்டளைக்கு மாறு செய்து,​​
அநியாயம்-அட்டூழியங்களில் ஈடுபட்டு தான்தோன்றித்தனமாக வாழ்ந்த ​
காலங்களில்,​​ இறைவன் தனது மற்றொரு தூதரை அனுப்பி,​​ அம்மக்களை
நேர்வழியின் பக்கம் அழைத்தான்.

இவ்வாறாகப் பலரும் இறைத் தூதர்களாக அனுப்பப்பட்டனர்.​ நூஹு ​(அலை),​​
இப்ராஹீம் ​(அலை),​​ தாவூது ​(அலை),​​ மூஸா ​(அலை),​​ ஈஸா ​(அலை)​ போன்ற
இறைத் தூதர்களின் வரிசையில் இறுதித் தூதுவராக வந்தவர்தான் நபிகள் நாயகம்
முஹம்மது ​(ஸல்)​ அவர்கள்.
நபி ​(ஸல்)​ அவர்கள் தமது 40வது வயதில் இறைத் தூதராகத் தேர்வு
செய்யப்பட்டார்.​ இறைத் தூதராகத் தேர்வு செய்யப்படும் முன்னரே,​​ அஸ்
ஸாதிக் ​(உண்மையாளர்),​​ அல் அமீன் ​(நம்பிக்கைக்குரியவர்)​ என மக்கள்
போற்றும்படி வாழ்ந்து காட்டினார்.​ ஒழுக்கம்,​​ நேர்மை,​​ நாணயம் என
வாழ்க்கையில் தானும் ஒரு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டி,​​ அதன்படி
வாழ்ந்து,​​ மனித சமுதாயமும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார்.
அண்ணலாரின் அழைப்பை ஏற்று,​​ ஆரம்பத்தில் இறை மார்க்கத்தை ஏற்றவர்கள்,​​
ஏழை-எளிய மக்களே.​ இக்கால கட்டத்தில் இறை நிராகரிப்பாளர்கள்,​​ இறை
விசுவாசிகளை,​​ “ஊர் விலக்கு’ செய்து,​​ மூன்றாண்டுகள் அபுதாலிப்
கணவாயில் தங்க வைத்தார்கள்.​ இச்சூழ்நிலையில்,​​ இறை விசுவாசிகள்
இலைகளையும்,​​ தழைகளையும் உண்ணும் அளவுக்கு ஏழ்மை அவர்களை வாட்டியது.​
இதனால் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ந்து அடுப்பெரியும் நிலை இல்லாத
அளவுக்கு ஏழ்மை கடுமையாக இருந்தது.​ பசியின் காரணமாக அண்ணலார் தன் அடி
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு பணியாற்றியதுண்டு.​ ஆனால் மக்களின்
அறியாமையைப் பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவிக்க ஒரு போதும் எண்ணியதில்லை.
“ஒரு மனிதன் யாசிப்பதைவிட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச்
சென்று விறகு வெட்டி,​​ அதை விற்று வாழ்க்கை நடத்துவது சிறந்தது’ என
உழைப்பின் உயர்வை உணர்த்திக் காட்டி யாசிப்பதை வெறுத்தார் அவர்.
நபி(ஸல்) ​ அவர்கள் ஒரு மனிதரிடம் கடன் வாங்கியிருந்தார்.​ அம்மனிதர்
கடனைத் திருப்பிக் கேட்கையில் நபியிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார்.​
அப்போது அருகிலிருந்த நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர்.​ உடனே நபி
​(ஸல்)​ அவர்கள் தம் தோழர்களை நோக்கி,​​ “”அவரை விட்டுவிடுங்கள்.​ கடன்
கொடுத்தவருக்குப் பேசும் ​ உரிமை உண்டு” எனக் கூறி,​​ அக்கடனை அழகிய
முறையில் திருப்பிச் செலுத்திவிட்டு,​​ “”வாங்கிய கடனை அழகிய முறையில்
திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்’ என நவின்றார் நபிகள்
நாயகம்.
எந்த இறைத் தூதரும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை என நபி(ஸல்)​ அவர்கள்
கூற,​​ அவர்களின் தோழர்கள்,​​ “இறைத் தூதர் அவர்களே!​ தாங்களுமா?’ எனக்
கேட்க அப்போது நபி(ஸல்)​ அவர்கள்,​​ “ஆம்.​ மக்காவாசியிடம் சில கீராத்
கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக இருந்தேன்’ எனக் கூறியதன் மூலம் தன்னுடைய
வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி உரைக்கின்றார் அண்ணலார்.
தாயிப் நகர மக்களை இறைமார்க்கத்தின் பக்கம் அழைத்தபோது அம்மக்கள்
அண்ணலாரை கல்லால் எறிந்து காயப்படுத்திய வேளையிலும்,​​ “”இம்மக்கள்
அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.​ இவர்கள் நேர் வழி பெறாவிட்டாலும்
இவர்களின் சந்ததிகள் நேர்வழி பெறக் கூடும்’ என எண்ணி அம்மக்களுக்காக
இறைவனிடம் இறைஞ்சினார் அண்ணலார்.
க்கா வெற்றியின்போது,​​ இன்னல் செய்த,​​ இழிவுபடுத்திய அனைத்து
மக்களுக்கும் பொது மன்னிப்பு அளித்தார் நபிகள்.
ஒரு முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம்
பழங்களில் ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில்
வைத்துவிட்டார்.​ உடனே தன் பேரரை நோக்கி,​​ “”சீ!​ சீ!​ அதைத்
துப்பிவிடு” என்று கூறிவிட்டு,​​ “”தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது
என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டு பொதுச் சொத்தை தம் குடும்பத்தினர்
சாப்பிடுவதைத் தடை செய்தார் அண்ணலார் அவர்கள்.
கேட்கும் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அண்ணலார் விளங்கினார்.​ ஒரு
முறை அழகுற நெய்யப்பட்ட சால்வை ஒன்றை ஒரு பெண்மணி அண்ணலாருக்கு
அன்பளிப்பாக வழங்கினார்.​ அந்தச் சால்வையை அண்ணலார் அவர்கள் வேட்டியாக
அணிந்திருந்தார்.​ அதனைக் கண்ட நபித்தோழர் ஒருவர் அதைத் தனக்கு
வழங்குமாறு கேட்டார்.​ உடனே நபி(ஸல்)​ அவர்கள் வீட்டினுள் சென்று அதைச்
சுருட்டி எடுத்து,​​ கேட்டவரிடம் கொடுத்து அனுப்பினார்.​ ​ ​ ஒரு முறை
நபி அவர்களிடம் ஒரு மனிதர் வீட்டிற்குள் வர அனுமதி கேட்டார்.​ “இவர்
அக்கூட்டத்தாரில் மிகவும் கெட்டவர்’ எனக் கூறிய நபிகள்,​​ அவர் உள்ளே வர
அனுமதி கொடுத்தார்.​ அவர் வீட்டினுள் வந்து உட்கார்ந்தபோது,​​ அவரிடம்
நபியவர்கள் முக மலர்ச்சியுடனும்,​​ கனிவுடனும் நடந்து கொண்டார்.​ அந்த
மனிதர் புறப்பட்டுச் சென்றபின் நபி அவர்களிடம் துணைவியார் ஆயிஷா
அவர்கள்,​​ “”இறைத் தூதர் அவர்களே!​ இந்த மனிதர் இப்படிப்பட்டவர் எனத்
தெரிந்தும் அவரிடம் முக மலர்ச்சியுடனும்,​​ கனிவுடனும் நடந்து
கொண்டீர்களே’ என்று கேட்டார்.​ அப்போது நபி ​(ஸல்)​ அவர்கள்,​​
“”ஆயிஷாவே!​ நான் யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதை எப்போதேனும் நீ
கண்டதுண்டா?” என்று மொழிந்தார்.
மாற்றுச் சமுதாயத்தவர்கள்கூட தங்களின் பொருட்களை அண்ணலாரிடம்
அடைக்கலமாகக் கொடுத்திருந்தனர்.​ மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது
அடைக்கலப் பொருட்களை திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பை தனது மருமகன் அலி
​(ரலி)​ அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றார் நபிகள்.
நபி அவர்கள் பொய் சொல்வதை மிகவும் கடுமையாக வெறுத்தார்.​ அவரின் கொடிய
விரோதி அபு ஜஹ்ல் கூட,​​ “”நான் உம்மைப் “பொய்யர்’ என்று கூறமாட்டேன்.​
நீர் கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் மிகவும் வெறுக்கிறேன்” என்றான்.
நபி(ஸல்) ​ அவர்களிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனஸ் பின்
மாலிக் என்பவர்,​​ “அண்ணலார் என்னை ஒரு போதும் திட்டியதோ,​​ கடிந்து
பேசியதோ கிடையாது’ எனச் சான்று பகர்கிறார்.
இறைவனும் தனது திருமறையின் 68வது அத்தியாயத்தின் நான்காம் வசனத்தில்,​​
“”நபியே!​ நிச்சயமாக நீர் உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக
இருக்கின்றீர்” என்று புகழ்ந்து கூறுகின்றான்.
“”இறைவன் மீதும்,​​ இறுதி நாளின் மீதும்,​​ ஆதரவு வைத்து இறைவனை அதிகம்
தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி
உங்களுக்கு இருக்கிறது.” ​(திருக்குர்ஆன் 33:21)
இறைத்தூதரின் வழி நடந்து இம்மை,​​ மறுமை வெற்றிகளைப் பெறுவோமாக! -

நன்றி:-ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர்
நன்றி:-தினமணி

அண்ணல்  நபி [ஸல்] ஓர் அழகிய முன்மாதரி ! 

No comments:

Post a Comment