எது நிரந்தரம்... - ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்., அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்..
கடவுள் :
"வா மகனே.... நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.."
மனிதன் :
"இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
கடவுள் :
"மன்னித்துவிடு மகனே.... உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."
மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."
மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!! என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.... எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?"
கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது.."
மனிதன் :
அப்படியானால், "என்னுடைய நினைவுகளா?"
கடவுள் :
"அவை காலத்தின் கோலம்...."
மனிதன் :
"என்னுடைய திறமைகளா?"
கடவுள் :
"அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...."
மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?"
கடவுள் :
"மன்னிக்கவும்....... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...."
மனிதன் :
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?"
கடவுள் :
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."
மனிதன் :
"என் உடலா?"
கடவுள் :
"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல.... உடலும் குப்பையும் ஒன்று...."
மனிதன் :
"என் ஆன்மா?"
கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல..., அது என்னுடையது......."
மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டுஅதிர்ச்சியடைகிறான்..
கண்ணில் நீர் வழிய கடவுளிடம், "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ் எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...
ஒவ்வொரு நொடியும் வாழ்..
உன்னுடைய வாழ்க்கையை வாழ்..
மகிழ்ச்சியாக வாழ்..
அது மட்டுமே நிரந்தரம்..!!
“உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.
இந்த உலகத்தை படைத்தது ஒரு இறைவன்தான் ! பல கடவுள்கள் இருக்கமுடியாது , அது சாத்தியம் இல்லை என்பதை அறிந்து , புரிந்து இறைவனின் ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்! இறைவன் என்பவன் யார் , அவன் எப்படி இருக்கவேண்டும் , அவனுடைய தன்மைகள் என்ன ? அவனுக்கு குடும்பம் தேவையா ? அவன் தேவையுள்ளவனா ? என்பதை நன்கு சிந்திக்கவேண்டும்! இறைவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்த நோக்கம் , மனிதர்களில் யார் அழகாக நற்செயல்கள் செய்கிறாரோ என்பதை சோதிப்பதற்காக படைத்துள்ளான் என்பதை விளங்கி வாழவேண்டும்! ஓரிறைக்கொள்கையில் இருக்கவேண்டும்! இறைவன் ஒருவன் தான் என்று வணங்கி வாழவேண்டும்!
Comments
Post a Comment