ஆழ்மனதின் சக்தி

 


ஆழ்மனதின் சக்தி   - அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்..

ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..


காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..


அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..


மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..


எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்..

யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..


மன்னனால் தூங்க முடியவில்லை.. உணவும் குறைந்து விட்டது.. மன்னன் பொலிவு இழந்தான்..

மன்னனோடு சேர்ந்து நாடும் கலை இழந்தது..


இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார்..


மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்..


"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி.. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.."


இங்கிருந்து மூவாயிரம் மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்..


இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.. எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.. அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.."


மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்..


மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது..


அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது..


 மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி..


மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.. நன்றாக உண்டான்.. பழைய பொலிவு திரும்பி விட்டது..


அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்..

அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்..


"குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''


''துறவி புன்னகை பூத்தார்"..


"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?'' மன்னனின் செவிக்குள்..

''அதுதான் இல்லை.. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம்.. சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்.. இல்லை, வெளியே வந்திருக்கும்..


அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது..


அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்."


"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே.


"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!


பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்..


அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..


தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."


''அந்த மூலிகை?''


"நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான்..

அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்..


பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.. மன்னன் நம்பி விட்டான்.. அவன் நோயும் தீர்ந்தது.."




இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன..


காதில் நுழைந்த பூச்சி செத்து விட்டது.. மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது..


இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


"எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' என்று எத்தனை பேர் ஜல்லியடிக்கிறார்கள் பாருங்கள்.

இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான்..


பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.. அது நம் மனதில் இருக்கிறது.. பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது..


ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம்!


Comments